வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன்: முதல்வரின் பாராட்டால் சூர்யா மகிழ்ச்சி

'ஜெய் பீம்' படத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டிய நிலையில், வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன் என்று சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. நாளை (நவம்பர் 2) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

'ஜெய் பீம்' படத்தின் பிரத்யேகக் காட்சி தமிழக முதல்வருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார். மேலும், படக்குழுவினரைப் பாராட்டி நீண்ட வாழ்த்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். (அந்தக் கடிதத்தை முழுமையாக படிக்க..)

'ஜெய் பீம்' படத்துக்கான தனது வாழ்த்துக் கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த ட்வீட்டை மேற்கோளிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். தமிழக முதல்வரின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, 'ஜெய்பீம்' திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. 'ஜெய்பீம்' படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE