தேசிய விருது பெறுவதற்குக் காரணமாக இருந்த தியாகராஜன் குமாரராஜாவுக்கு நேரில் நன்றி தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்றது. இதில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்ததிற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்.
இந்த விருது பெறுவதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு நன்றி என்று தேசிய விருது பெற்றவுடன் அளித்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி. மேலும், சென்னை திரும்பியவுடன் தேசிய விருதுடன் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார்.
இந்த வீடியோ பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அதில் தேசிய விருதுக்காகக் கடிதத்தினை படிக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. அதனைத் தொடர்ந்து தேசிய விருதினை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கைகளால் விஜய் சேதுபதிக்கு அணிவித்து விடுகிறார். என்னோட வாய்ப்பில் தேசிய விருது வந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் தியாகராஜன் குமாரராஜா.
» அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் ‘சூப்பர்மேன்’?
» பவன் கல்யாணுடன் இணைந்து பணியாற்றாதது ஏன்? - இயக்குநர் ராஜமௌலி விளக்கம்
அதனைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.