கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று முன் தினம் காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் புனித் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 3 மணியளவில் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவால் ஒட்டுமொத்த கர்நாடக மக்களும்சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கியஇடங்களில் அவரது புகைப்படங்களை வைத்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தி வந்தனர்.
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்குநேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமாரின் இறுதிஊர்வலம் இன்று காலை கண்டீரவா ஸ்டேடியத்தில் தொடங்கியது. யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அவரது தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அரசுக்கும், ரசிகர்களுக்கும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து புனித் ராஜ்குமாரின் சகோதரரான சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும், கர்நாடக அரசுக்கும், அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எங்கள் தந்தை ராஜ்குமார் மறைவின் போது ஏற்பட்ட வன்முறையையும், பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை நாங்கள் அறிவோம். அதுபோல மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று விரும்பினோம். யாருக்கும் எந்த தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது. கடந்த முறை எங்கள் தந்தைக்கான இறுதிச் சடங்குகளை நாங்கள் செய்வதற்கு முன்பே அவரது ரசிகர்களே அனைத்தையும் செய்துவிட்டனர். இந்த முறை அப்படி நடந்துவிடக்கூடாதுன்னு விரும்பினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.