'சூர்யவன்ஷி' படத்துக்காகப் பின்வாங்கிய சல்மான் கான்

By செய்திப்பிரிவு

'சூர்யவன்ஷி' திரைப்படத்துக்காகத் தனது 'ஆந்திம் தி ஃபைனல் ட்ரூத்' திரைப்பட வெளியீட்டை தீபாவளி அன்று திட்டமிடாமல் சல்மான் கான் பின்வாங்கியுள்ளார்.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. முக்கியமாக இதில் 'சிங்கம்' அஜய் தேவ்கன் மற்றும் 'சிம்பா' ரன்வீர் சிங் என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து கடந்த ஆண்டிலிருந்தே வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படம் வெளியாகவில்லை. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வராத காரணத்தால், 'சூர்யவன்ஷி' வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவானதால், ஓடிடி தளத்திலும் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. முழுமையாகத் திரையரங்குகள் திறப்பதற்குப் படக்குழு காத்திருந்தது.

3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் 'சூர்யவன்ஷி' வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள். முன்னதாக சில தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் எதுவும் இறுதியாகவில்லை. கடைசியாக தீபாவளிப் பண்டிகை வெளியீடாக நவம்பர் 5-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.

இன்னொரு பக்கம் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆந்திம் தி ஃபைனல் ட்ரூத்' திரைப்படத்தை வெளியிட சரியான தேதியை சல்மான் கான் பார்த்துக் கொண்டிருந்தார். தீபாவளி நாளன்று படத்தை வெளியிடலாமா என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தார். ஆனால் 'சூர்யவன்ஷி' படத்தின் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சல்மான் கானைச் சந்தித்து, தனது திரைப்படத்தின் பொருட்செலவு அதிகம், மேலும் அது போட்டியின்றி தனியாக வெளியானால்தான் அனைத்துத் தரப்பினருக்கும் நல்லது என்று கோரிக்கை வைத்தார்.

சல்மான் கானும் ரோஹித் ஷெட்டி சொன்னதை ஏற்றுக்கொண்டார். இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியானால் சரியான திரையரங்குகள் இரண்டு படங்களுக்குமே கிடைக்காது, எனவே 'சூர்யவன்ஷி' தனியாகவே வெளியாகட்டும் என்று தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார் சல்மான் கான். தற்போது 'ஆந்திம் தி ஃபைனல் ட்ரூத்' படம் நவம்பர் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் கலைஞர்களிடையே இப்படியான ஒரு புரிதலும், சகோதரத்துவமும் இருப்பது குறித்து துறையைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் 'சூர்யவன்ஷி' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வண்ணம் ரோஹித் ஷெட்டியும், கத்ரீனா கைஃபும் கலந்துகொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE