இயற்கைக்கு இரக்கம் இல்லை: புனித் ராஜ்குமாருக்கு பாரதிராஜா இரங்கல்

By செய்திப்பிரிவு

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 'பவர் ஸ்டார்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இன்று (அக்டோபர் 29) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னடத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கன்னட பவர் ஸ்டார், என்னுடைய நண்பர் ராஜ் குமாரின் சினிமா மரபு, தொடர்ச்சி இப்போது இல்லை. தலைசிறந்த, இளம் இதயமான புனித் ராஜ்குமாரிடம் இயற்கைக்கு இரக்கம் இல்லை. அவருடைய குடும்பத்துக்கும் தென்னிந்தியத் திரை உலகத்துக்கும் இது ஒரு தாங்கமுடியாத இழப்பு.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE