புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

By செய்திப்பிரிவு

திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனப் பல தளங்களில் பணிபுரிந்து வருகிறார்.

பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக 'யுவரத்னா' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 'ஜேம்ஸ்', 'த்வித்வா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்று (அக்டோபர் 29) காலை புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

புனித் ராஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் வெளியானவுடன், அங்கு ரசிகர்கள் குவியத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார்.

தற்போது ஐ.சி.யூவில் இருக்கும் புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE