மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் நலமுடன் ஓய்வெடுத்து வருவதாக அவரது உறவினரான ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (28.10.21) இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் தங்கியிருந்து பரிசோதனையை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார் என்று ரஜினியின் மனைவி லதா தெரிவித்திருந்தார்.
பலரும் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் ரஜினியின் உறவினருமான ஒய்.ஜி.மகேந்திரன் நேற்று ரஜினியை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ரஜினிகாந்த் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை தொந்தரவு செய்யவேண்டாம். மருத்துவமனையில் அவரை நான் நேரில் பார்த்தேன். தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை நான் தொந்தரவு செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.
அண்மையில், 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.