சமூக வலைதளப் பதிவால் உருவான சர்ச்சை: பார்த்திபன் விளக்கம்

மனோஜ் பாஜ்பாய் உடன் புகைப்படம் எடுத்துப் போடப்பட்ட பதிவுக்கான எதிர்வினைகளுக்கு பார்த்திபன் பதிலளித்துள்ளார்.

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்திருந்த 'ஒத்த செருப்பு' படத்துக்குச் சிறந்த நடுவர் தேர்வு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறந்த நடிகர் விருதை தனுஷ், மனோஜ் பாஜ்பாய் இருவரும் பெற்றனர்.

இதில் மனோஜ் பாஜ்பாய் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் பார்த்திபன். அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறந்த நடிகர்! விருது … பெற்றவருடன் பெறாதவர்" என்ற தலைப்புடன் பகிர்ந்தார். இந்தப் பதிவுக்குக் கடும் எதிர்வினைகளைச் சந்தித்தார் பார்த்திபன். பலர் கிண்டலாகவும் பதிவுகளை வெளியிட்டனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"அதாகப்பட்டது… ஆதங்கமாகப்பட்டது... ஆர்வமாக்கப்பட்டு... அதுவே க்ரியா ஊக்கியாகி பின் கிரியேட்டிவிட்டி ஆகி அதே சிந்தையாகி சித்தமாகி சிரத்தையாகி செயல் வடிவமாகிப் படைப்பாகிப் பரிசாகியும் விடுகிறது எனக்கு. முன் அடையாளமில்லாத நான் சினிமாவுக்குள் வந்ததே திறமை பாராட்டப்படுவதற்கே. அதற்கான உழைப்பே அஸ்திவாரம்.

இது ஒரு பக்கம்…

நான் எந்தப் பதிவை இட்டாலும், “சிறந்த நடிகர் மனோஜ் பாயுடன்” என்று மொக்கையாக வெறும் செய்தியாக இடுதல் பிடிக்காது. அதில் ஏதேனும் hook point, எவ்வாறெல்லாம் அவ்வார்த்தைத் தொடர் கவனிக்கப்படுகிறது என்ற ஆர்வத்தில் தான் இட்டேனே தவிர, ஆதங்கத்தில் அல்ல. அது தவறாக அறிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், ஆயிரத்தில் 990 பேர் எழுதியிருக்கும் வாசகங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

மீதமுள்ள வாசகங்கள் …சோதனை முயற்சி போடும் போஸ்ட்டில் தேவையில்லையோ? அல்லது போஸ்ட்டே தேவையில்லையோ? என்றும் யோசிக்க வைக்கிறது. பூமி கூட 100 டிகிரி நேராகச் சுழலவில்லையே! 23.5 டிகிரி சாய்வாகத்தானே?"

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE