'பருத்திவீரன்' குறித்து இன்னும் மக்கள் பேசுவதில் மகிழ்ச்சி என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'விருமன்'. 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரையில் படப்பிடிப்பில் இருப்பது குறித்து கார்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
" 'விருமன்' படப்பிடிப்புக்காக 14 வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கு வந்திருக்கிறேன். இங்கு 'பருத்திவீரன்' குறித்து இன்னும் மக்கள் பேசிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கிருக்கும் மக்களின் அன்பும், அரவணைப்பும் என்றும் மாறாதது. நன்றியோடு, ஆசிர்வதிக்கப்பட்டனாய் உணர்கிறேன்".
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி, சரவணன், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பருத்திவீரன்'. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.