சூர்யா மிகவும் பணிவான மனிதர்: ஜானி மாஸ்டர்

By செய்திப்பிரிவு

சூர்யா சார் பணிபுரிவதற்கு மிகவும் பணிவான ஒரு மனிதர் என்று ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்குத் தொடர்ச்சியாக நடன இயக்குநராக பணிபுரிந்து வருபவர் ஜானி மாஸ்டர். 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் 'புட்ட பொம்மா' பாடல் மற்றும் நடன அமைப்புகள் என அனைத்துமே பலரையும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்களுக்கு நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணிபுரிந்து வருகிறார்.

சமீபத்தில் 'டாக்டர்' படத்தின் 'செல்லம்மா' பாடலுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர் தான். அதே போல் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் அனைத்து பாடல்களுக்கும் ஜானி மாஸ்டர் தான் நடன இயக்குநர்.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு.

விரைவில் படமாக்கப்படவுள்ள புதிய பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரியவுள்ளார் ஜானி மாஸ்டர். சூர்யாவுடன் அவர் பணிபுரியும் முதல் படமாக இது அமைந்துள்ளது. சூர்யா - பிரியங்கா மோகன் இருவருக்கும் நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் ஜானி மாஸ்டர்.

சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"சூர்யா சார் பணிபுரிவதற்கு மிகவும் பணிவான ஒரு மனிதர். முதன்முறையாக அவரோடு பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வியப்பாக இருக்கிறது. 'எதற்கும் துணிந்தவன்' படத்திலிருந்து எங்கள் பாடலை காணத் தயாராகுங்கள்"

இவ்வாறு ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE