விஜய்க்கு அனைத்து மதமும் ஒன்று தான்: இயக்குநர் பேரரசு

By செய்திப்பிரிவு

விஜய்க்கு அனைத்து மதமும் ஒன்று தான் என்று இயக்குநர் பேரரசு தனது பேச்சில் குறிப்பிட்டார்.

உசேன் தயாரிப்பில், இயக்குநர் ராஜராஜ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'முதல் மனிதன்'. இதில் ஆடுகளம் நரேன், மாரிமுத்து, கெளசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'முதல் மனிதன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (அக்டோபர் 22) நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது:

"அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இங்கு இருக்கிறார்கள். முதல் மனிதன் படத்திற்கான வெற்றி இங்கேயே ஆரம்பித்து விட்டது. சாதிக் கலவரத்தைத் தூண்டுவதை இப்போது சினிமாவிலும் ஆரம்பித்து விட்டார்கள். அது நல்ல விஷயம் இல்லை. சாதி கலவரத்தைத் தூண்டும் படங்கள் வரும் சமயத்தில் சாதியே இல்லை என இப்படம் வருவது மகிழ்ச்சி.

சாதியை வைத்து இப்போது எல்லோரும் பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு சாதியை உயர்த்தி இன்னொரு சாதியைத் தாழ்த்தி எடுக்கும் சினிமாவை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரி படத்தைத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கக் கூடாது. சினிமாவில் யார் சாதியைப் பார்த்துப் பழகுகிறார்கள். அனைவருமே நண்பர்களாக இருக்கிறார்கள்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள் 3 பேர். நான் சினிமாவுக்கு வரக் காரணமான யூசுப், குருநாதர் ராமநாராயணன் சார் மற்றும் பேரரசு என்றால் வெளியே தெரிவதற்குக் காரணமான தளபதி விஜய் சார். தளபதி விஜய் ஆகத்தான் இருந்தார், அவரை இடையில் ஜோசப் விஜய் ஆக ஆக்கிவிட்டார்கள். அவர் தன்னை கிறிஸ்துவராக நினைக்க மாட்டார். அவரும் நானும் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்றுள்ளோம். அவருக்கு அனைத்து மதமும் ஒன்று தான். நாம் தான் அவரை கிறிஸ்துவராகப் பார்க்கிறோம்.

நண்பன் முஸ்லிம், குருநாதர் இந்து, வாய்ப்பு கொடுத்தவர் கிறிஸ்துவர். இவர்கள் யாருமே என் மதத்தைப் பார்த்து வாய்ப்புக் கொடுக்கவில்லை. மனிதனாகப் பார்த்தார்கள். ஆகையால் சினிமாவில் சாதியும் இல்லை, மதமும் இல்லை. சினிமாவில் சாதியை வளர்ப்பவர்களை அழித்துவிட வேண்டும். அனைவருக்கும் பொதுவானது சினிமா.

இந்துவாகப் பிறந்ததால் நான் இந்துவாக இருக்கிறேன். என் அப்பா காட்டிய தெய்வத்தை நான் வழிபடுகிறேன் இதில் என் தவறு எங்கு இருக்கிறது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த முதல் மனிதன் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி"

இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE