சேனல்களை மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்: சமந்தாவுக்கு நீதிமன்றம் அறிவுரை

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பரப்பிய சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட அவர்களை மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம் என்று நடிகை சமந்தாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக சமந்தா அறிவித்தார். சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக ஊடகங்களிலும், யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன.

இன்னொரு பக்கம் இந்த விவாகரத்துக்குக் காரணம் சமந்தாதான் என்று அவரைப் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதனிடையே, தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்தவிதமான எதிர்மறை விஷயங்களும் தன்னைப் பாதிக்காது என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீதும், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசிய வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் மீதும் சமந்தா மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று (அக்.22) ஹைதரபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ''சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது வழக்குத் தொடர்வதை விட அவர்களை நடிகை சமந்தா மன்னிப்பு கேட்கச் சொல்லியிருக்கலாம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று இல்லை. சமந்தாவின் வழக்கை நடைமுறைப்படி நீதிமன்றம் விசாரிக்கும்'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE