அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய் தேவரகொண்டா

By செய்திப்பிரிவு

'ஆர்யா' படத்தின் 3-வது பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு பதிலாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

'புஷ்பா' படத்துக்கு முன்னதாக சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணி, 'ஆர்யா', 'ஆர்யா 2' ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளன. இந்த இரண்டு படங்களுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. தற்போது 'புஷ்பா' படங்களை முடித்துவிட்டு, 'ஆர்யா' படத்தின் 3-ம் பாகத்தில் பணிபுரியவுள்ளார் சுகுமார்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சுகுமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை ஃபல்கான் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் 'ஆர்யா 3' ஆக இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் 'லிகர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் தேவரகொண்டா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE