ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல் 'நெஞ்சுக்கு நீதி': உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக 'நெஞ்சுக்கு நீதி' இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். 'நெஞ்சுக்கு நீதி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நாயகன் உதயநிதி ஸ்டாலினை போனி கபூர் மற்றும் இணை தயாரிப்பாளரான ராகுல் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

"எனது ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர், நிர்வாகத் தயாரிப்பாளர் ராகுல் இருவரும் இன்று என்னைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். 'நெஞ்சுக்கு நீதி' ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் நிச்சயம் ஒலிக்கும். நன்றி".

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ், கலை இயக்குநர்களாக வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா, எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE