சுதா கொங்கரா இயக்கவுள்ள புதிய படமொன்றில் நாயகனாக சூர்யா நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, மோகன் பாபு, ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் தயாராகவுள்ளது. இந்திக்கு ஏற்றவகையில் காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் மாற்றம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சுதா கொங்கரா.
'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் முடிந்தவுடன், மீண்டும் சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் சுதா கொங்கரா. இதற்கான பேச்சுவார்த்தை 'சூரரைப் போற்று' படம் முடிந்தவுடனே நடைபெற்றுள்ளது. ஆனால், என்ன கதை உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே, 'சூரரைப் போற்று' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதற்கு சோனி நிறுவனம் விருது வழங்கியுள்ளது. இந்த விருதைப் பகிர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது:
"தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சிறப்பாக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் என்கிற அங்கீகாரத்தை எங்களுக்குக் கொடுத்த சோனி மியூஸிக் சவுத்துக்கு நன்றி. சுதா கொங்கரா, சூர்யா, ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்டோருக்கு நன்றி. மீண்டும் 'சூரரைப் போற்று' குழுவுடன் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?"
இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கேட்டுள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் ட்வீட்டைக் குறிப்பிட்டு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்ன சிறப்பான பாடல்கள், என்னே ஒரு பயணம். ஜி.வி.பிரகாஷ் மற்றும் சுதாவுக்குப் போதுமான நன்றியைச் சொல்ல இயலாது. நாங்கள் மேற்கொண்டு எதற்குக் காத்திருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்?"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.