எனது மிகச்சிறந்த படங்களில் ஒன்று 'பார்டர்': அருண் விஜய்

By செய்திப்பிரிவு

எனது மிகச்சிறந்த படங்களில் ஒன்று 'பார்டர்' என்று அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. ஆன் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிந்து, நவம்பர் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தைப் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாகப் பார்த்துள்ளார்கள். அதற்குப் பிறகு இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு ஆப்பிள் ஐ பேடைப் பரிசாக வழங்கியுள்ளார் அருண் விஜய். இந்தப் பரிசுக்கு நன்றி தெரிவித்து ஒளிப்பதிவாளர் ராஜசேகர் ட்வீட் வெளியிட்டிருந்தார்.

ராஜசேகரின் ட்வீட்டைக் குறிப்பிட்டு அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இது படத்தில் உங்கள் அற்புதமான பணிக்கான ஒரு அன்பின் அடையாளம். இந்த அற்புதமான கதையை என்னிடம் கொடுத்து நடிக்கவைத்த இயக்குநர் அறிவழகனுக்கு நன்றிகள். இந்தக் குழுவின் மீது நம்பிக்கை வைத்த ஆல் இன் பிக்சர்ஸுக்கும் நன்றி. 'பார்டர்' என்னுடைய மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகவும், என் சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாகவும் இருக்கும்".

இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'யானை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE