ராம்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
'ராட்சசன்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரம்மாண்ட கதையொன்றை எழுதி வந்தார் இயக்குநர் ராம்குமார். இந்தக் கதையில் நடிக்க தனுஷ் சம்மதம் தெரிவித்தார். சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன.
தற்போது தனுஷ் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதால், இந்தக் கதையில் நடிப்பதற்கு இதர நாயகர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது படக்குழு. இந்தக் கதையை சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார் ராம்குமார். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிடவே, நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விரைவில் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு ஒப்பந்தமாக கையெழுத்தானவுடன், அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு.