அடுத்த படத்தின் பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் மும்முரம்

By செய்திப்பிரிவு

தான் இயக்கவுள்ள அடுத்த படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் தீவிரமாகியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 65' படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். இதனால் புதிய களத்தில் தனது அடுத்த படத்தினை இயக்க திட்டமிட்டார்.

முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் பிரம்மாண்டமாக கதைகளம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் நாயகன் ஒருவனுடன் விலங்கினம் ஒன்றும் கூடவே வருவது போன்ற களம். ஆகையால் இந்தப் படத்துக்கான முதற்கட்ட கிராபிக்ஸ் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தினை முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமான பிரைம் ஃபோகஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. முதலில் கிராபிக்ஸ் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, எப்படி எல்லாம் படப்பிடிப்பு செய்வது, எப்போது படப்பிடிப்பு தொடங்குவது உள்ளிட்ட விஷயங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் கவனம் செலுத்தவுள்ளார்.

இந்தப் படத்தினை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகள் மட்டுமன்றி ஹாலிவுட்டிலும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE