'டாக்டர்' படத்துக்கு வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதற்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன், ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். வசூல் ரீதியாகவும் 'டாக்டர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வரை திரையரங்குகள் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருப்பதாகத் திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.
இதர படங்கள் வெளியானாலும், 'டாக்டர்' படத்தின் வசூலில் எந்தவொரு தொய்வும் ஏற்படவில்லை. இதுவரை மொத்த வசூலில் சுமார் 50 கோடி ரூபாயை கடந்துவிட்டது 'டாக்டர்'. இதில் தயாரிப்பாளருக்கு வரும் பங்குத் தொகை மட்டுமே சுமார் 30 கோடியைத் தாண்டியிருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
'டாக்டர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் "அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். என் அத்தனை சகோதர, சகோதரிகளின் அன்புக்கும், ஆதரவுக்கும் விசேஷ நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.
'டாக்டர்' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டான்' மற்றும் 'அயலான்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.