உடல்நலம் குறித்த வதந்தி: ராமராஜன் தரப்பு விளக்கம்

By செய்திப்பிரிவு

ராமராஜன் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு அவர் தரப்பிலிருந்து மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராமராஜன். அதன் பிறகு 1986ஆம் ஆண்டு வெளியான ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘கரகாட்டக்காரன்’ எனத் தொடர் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்தார். 90களுக்குப் பிறகு படங்களில் நடிப்பது படிப்படியாகக் குறைந்து தற்போது முற்றிலுமாக சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார்.

அவ்வப்போது ராமராஜன் உடல்நலம் குறித்து இணையத்தில் வதந்திகள் பரவுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களாக ராமராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது.

தற்போது ராமராஜன் தரப்பிலிருந்து அந்த வதந்திக்கு மறுப்புச் செய்தி வெளியாகியுள்ளது.

அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

''வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாறில் சரித்திரம் படைத்த ‘கரகாட்டக்காரன்’ படம் மட்டுமல்லாமல் பல நூறு நாட்கள் படங்களைத் தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமராஜனைப் பற்றி தற்சமயம் தவறான வதந்தியைப் பரப்பிவருகிறார்கள். ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.

இரண்டு படங்களுக்குத் தனது கதையைத் தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE