தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது மாநாடு: காரணம் என்ன?

By செய்திப்பிரிவு

‘மாநாடு’ படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென தீபாவளிப் போட்டியிலிருந்து ‘மாநாடு’ படம் பின்வாங்கியுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று (அக். 18) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்,

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பலனாக அறுவடைக்குக் காத்திருக்கிறது ‘மாநாடு’.

முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டு விட்டன. ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படிப் பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல. நமது 'மாநாடு' நன்றாக, திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால், என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டுக்குப் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நட்டமடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? அதனால் 'மாநாடு' தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது.

நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும். 'மாநாடு' தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது''.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE