தொடர்ந்து வசூல் சாதனையில் ‘டாக்டர்’: படக்குழுவினர் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் தொடர்ந்து வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்று வருவது படக்குழுவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன், ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். வசூல் ரீதியாகவும் 'டாக்டர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே படம் ரூ.16 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது.

கடந்த வாரம் சுந்தர். சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும் கூட ‘டாக்டர்’ படத்தின் வசூலில் தொய்வு ஏற்படவில்லை என்றும், இந்த ஆண்டு ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு அதிக வசூல் சாதனை புரிந்த படம் இதுதான் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது ரூ.50 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சிவகார்த்திகேயன் படங்களில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படமாக ‘வேலைக்காரன்’ படம் இருந்து வந்தது. அந்த சாதனையையும் தற்போது ‘டாக்டர்’ படம் முறியடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE