'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடக்கம்: ஒளிப்பதிவாளர் மாற்றம்

By செய்திப்பிரிவு

'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டார் தனுஷ். இதனைத் தொடர்ந்து 'மாறன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து இன்று (அக்டோபர் 16) முதல் 'நானே வருவேன்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை தாணு தயாரித்து வருகிறார். இதன் போட்டோ ஷூட் பணிகள் முன்பே முடிவடைந்துவிட்டன. தனுஷின் தேதிகளுக்காகக் காத்திருந்தது படக்குழு. இன்று தொடங்கப்பட்டும் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிய ஒப்பந்தமானார்கள். ஆனால், தற்போது ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னமூர்த்தி பணிபுரிந்து வருகிறார்.

இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'சாணிக் காயிதம்' படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். இதில் இவருடைய பணியைப் பார்த்துவிட்டு, 'நானே வருவேன்' படத்தின் வாய்ப்பை வழங்கியுள்ளார் செல்வராகவன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE