ராஜமெளலியைப் பின்பற்றும் பிரசாந்த் நீல்

By செய்திப்பிரிவு

ராஜமெளலி இயக்கிய நாயகர்களுடன் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார் பிரசாந்த் நீல்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் படம் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு, இதில் நடித்த நடிகர்கள் அனைவருமே உலக அளவில் பிரபலமானார்கள்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப்' படத்துக்கும் உலக அளவில் வரவேற்பு கிடைத்தது. இதன் 2-ம் பாகம் தயாரிப்பில் உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

'கே.ஜி.எஃப் 2' படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கி வரும் புதிய படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து வருகிறார். 'சலார்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு ஆகியோர் பிரபாஸ் உடன் நடித்து வருகிறார்கள்.

தற்போது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இரண்டு நாயகர்களுடனும் பணிபுரியவுள்ளார் பிரசாந்த் நீல்.

'சலார்' படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல். 'ஆர்.ஆர்.ஆர்' படத்தைத் தயாரித்து வரும் டிவிவி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான சந்திப்பு நேற்று (அக்டோபர் 14) சிரஞ்சீவி வீட்டில் நடைபெற்றது.

ராஜமெளலி பணிபுரிந்து வரும் நாயகர்களின் அடுத்தடுத்த படங்களை பிரசாந்த் நீல் இயக்கவுள்ளதால், அந்தப் படங்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE