மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாய்தரம் தேஜ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
நடிகர் சீரஞ்சீவியின் சகோதரி மகன் சாய்தரம் தேஜ். இவரும் தெலுங்கு சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார். செப்டம்பர் 10-ம் தேதி மாலை ஹைதராபாத்தின் மாதாப்பூர் பகுதியில் சாய்தரம் தேஜ் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பல்வேறு பிரபலங்கள் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். சுமார் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு இன்று (அக்டோபர் 15) வீடு திரும்பியுள்ளார் சாய்தரம் தேஜ். இன்று அவருடைய பிறந்த நாளாகும்.
சாய்தரம் தேஜ் வீடு திரும்பியுள்ளது தொடர்பாக சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த விஜயதசமி நாளின் மற்றுமொரு சிறப்பம்சம், விபத்தில் அதிசயமாகத் தப்பித்து தற்போது முழுமையாக குணமாகி சாய் தரம் தேஜ் வீடு திரும்புகிறார் என்பதே. இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவருக்கு இது மறுபிறவியே தவிர வேறொன்றுமில்லை. அத்தை, பெரிய மாமாவின் பிறந்த நாள் வாழ்த்துகள் தேஜு. வாழ்க வளமுடன்".
இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.