உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ராஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நவம்பர் 2-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டுப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலாவதாக 'ஜெய் பீம்' டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காட்சியமைப்புகள் மற்றும் வசனங்கள் என அனைத்துமே இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கும் என்பது தெரிகிறது.
இந்த டீஸரைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சூர்யா கூறியிருப்பதாவது:
"உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவைத் தரும் ஜெய் பீம்!".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.