'கிளாடியேட்டர் 2' கதையை ஏற்கெனவே எழுதி முடித்துவிட்டதாக இயக்குநர் ரிட்லி ஸ்காட் கூறியுள்ளார்.
2000-ம் ஆண்டு வெளியான 'கிளாடியேட்டர்' திரைப்படம் நடிகர் ரஸ்ஸல் க்ரோ மற்றும் இயக்குநர் ரிட்லி ஸ்காட்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இன்றுவரை அறியப்படுகிறது. தனக்கு துரோகம் செய்து, தன் குடும்பத்தைக் கொலை செய்த அரசனைக் கொல்லும் ஒரு போர்வீரனின் கதை 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.
சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்த ஆஸ்கர் விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இயக்குநர் ரிட்லி ஸ்காட் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் சமீபத்தில் கலந்துகொண்ட ரிட்லி ஸ்காட் 'கிளாடியேட்டர் 2' குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''எப்படி 'கிளாடியேட்டர்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்காமல் இருப்பேன்? அப்படி இருந்தால் நான் முட்டாள் என்று விமர்சிக்கப்படுவேன். 'கிளாடியேட்டர் 2' கதையை ஏற்கெனவே எழுதி முடித்துவிட்டேன். தற்போது நெப்போலியனின் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘கிட்பேக்’ என்றொரு படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் பட வேலைகள் முடிந்ததும் 'கிளாடியேட்டர் 2' பணிகள் தொடங்கும்''.
இவ்வாறு ரிட்லி ஸ்காட் கூறியுள்ளார்.