என்னிடம் மறைக்க எதுவுமில்லை, எனக்கு பயமுமில்லை என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கும் நடிகர்களில் முக்கியமானவர் சித்தார்த். தான் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவது மட்டுமன்றி, அரசியல் ரீதியான கருத்துகளையும் துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். சில சமயங்களில் சித்தார்த் தனது ட்வீட்களின் மூலம் சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.
தற்போது அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த், சர்வானந்த், அதிதிராவ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'மகா சமுத்திரம்'. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார் சித்தார்த்.
அதில் துணிச்சலாகக் கருத்துகள் தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு சித்தார்த் கூறியிருப்பதாவது:
"நான் எனது 8 வயதிலிருந்தே பொது வெளியில் பேசி வருகிறேன். 'விஸ்வரூபம்' வெளியீடு சமயத்தில் கமல்ஹாசனுக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசினேன். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மனப்பான்மைக்கு எதிராக நான் என்றுமே எதிர்த்துப் பேசியிருக்கிறேன். நான் சரி என்று நினைக்கும் விஷயத்தைப் பேசுவதால் வெறுக்கப்படுவதே மேல் என்று நினைக்கிறேன். என்னிடம் கறுப்புப் பணம் கிடையாது. மறைக்க எதுவுமில்லை. எனக்கு பயமுமில்லை"
இவ்வாறு சித்தார்த் தெரிவித்துள்ளார்.