சமந்தா என் சகோதரி போன்றவர் என்று அவரது டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கிடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.
இருவரின் பிரிவு துரதிர்ஷ்டவசமானது என்று நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா தெரிவித்திருந்தார். இருவருடைய பிரிவு அறிவிப்புக்குப் பிறகு, பிரிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணமுள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவும் தன்பக்க விளக்கத்தைக் கொடுத்துவிட்டார்.
சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர்தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இணையத்தில் ப்ரீத்தம் ஜுகல்கரின் பெயர் விவாதத்துக்குள்ளானது.
» வசூல் ரீதியாக வரவேற்பு: 'டாக்டர்' படக்குழுவினர் மகிழ்ச்சி
» பாகுபாடு காட்டுபவர்களோடு என்னால் இருக்க முடியாது; என்னைக் காயப்படுத்திய விஷயம்: பிரகாஷ்ராஜ் பேட்டி
இந்நிலையில் ரசிகர்களின் இந்த விமர்சனத்துக்கு ப்ரீத்தம் ஜுகல்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
''நாக சைதன்யாவின் அமைதி எனக்குக் கவலையளிக்கிறது. சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். நான் அவரை ஜிஜி என்று அழைப்பது அனைவருக்குமே தெரியும். எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேசமுடியும்? எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். சாமையும் என்னையும் பற்றி யாரும் அப்படி பேசவேண்டாம் என்று வாய்திறந்து பேசியிருக்கலாம். அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் கூட அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்போது ரசிகர் என்ற போர்வையில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்''.
இவ்வாறு ப்ரீத்தம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.