தெலுங்குத் திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார்.
தெலுங்குத் திரைப்பட நடிகர் சங்கத்துக்கான (எம்ஏஏ) தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியும், அதை எதிர்த்து நடிகர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டன.
இந்த இரண்டு அணிகளும் செய்துவந்த தேர்தல் பிரச்சாரங்கள் குறித்து இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் சூடான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் என்றும், வெளிநபருக்குத் தெலுங்குத் திரையுலகம் ஆதரவளிக்கக் கூடாது என்றும் தொடர்ந்து விஷ்ணு மஞ்சு அணியினர் பிரச்சாரம் செய்து வந்தனர். எனினும் நாகர்ஜுனா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் பிரகாஷ்ராஜ் அணிக்கு ஆதரவளித்தனர்.
இந்நிலையில் நேற்று (10.10.21) நடந்த இந்தத் தேர்தலில் 665 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நடந்து முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில் விஷ்ணு மஞ்சு அணி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.