ஷங்கர் பாராட்டு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'டாக்டர்' படத்துக்கு ஷங்கர் பாராட்டு தெரிவித்திருப்பதால், சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியில் இருக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், ப்ரியங்கா மோகன், இளவரசு, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது.

'டாக்டர்' படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில் "'டாக்டர்' திரைப்படம் இந்த கரோனா காலகட்டத்தில் நமக்கு சிறந்த சிரிப்பு மருந்தைக் கொடுத்துள்ளது. அனைவரையும் சிரிக்க வைத்த இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டுக்கள். இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்துக்காக சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்துக்கு நன்றி. திரையரங்க அனுபவம் திரும்பக் கிடைப்பதைப் பார்க்க மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

ஷங்கரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து வகையில் சிவகார்த்திகேயன் "முதல்முறையாக எனக்கு மிகவும் பிடித்த ஷங்கர் சாரிடம் இருந்து பாராட்டு. 'டாக்டர்' படத்தை மறக்கமுடியாத படமாக மாற்றியதற்கு மிக்க நன்றி சார்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷங்கரின் பாராட்டுக்கு இயக்குநர் நெல்சன் "சார் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார். உங்களிடமிருந்து இந்த வார்த்தைகள் கிடைப்பது எங்களுக்கு மிகப்பெரிய விஷயம். படத்தை நீங்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இது எங்களுக்கு ஒரு உத்வேகம்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE