வெளியானது 'டாக்டர்': திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' வெளியீட்டைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன், தற்போது 50% இருக்கை அனுமதியுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்வேறு பெரிய படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதிப்படுத்தாமல் இருந்தன.

கரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு வெளியாகும் முதல் பெரிய நடிகரின் படமாக 'டாக்டர்' அமைந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருந்தது.

நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சிவகார்த்திகேயன் பெரிய தொகை ஒன்றை விட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எந்தவித சிக்கலுமின்று இன்று (அக்டோபர் 9) காலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது 'டாக்டர்' திரைப்படம்.

கரோனா இரண்டாம் அலை ஊரடங்கிற்குப் பின் வெளியாகும் பெரிய நடிகரின் படம் என்பதால், பல்வேறு திரையுலக பிரபலங்கள் சிவகார்த்திகேயனுக்கு தங்களுடைய ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

'டாக்டர்' வெளியானதை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் "நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்றுக் கொடி. இன்று முதல் 'டாக்டர்' உங்கள் திரையரங்குகளில். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கண்டுகழித்து மகிழுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE