'பஹீரா' என்ன ஜானர் என்று தெரியாது: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

By செய்திப்பிரிவு

'பஹீரா' என்ன ஜானர் படமென்று எனக்குத் தெரியாது என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி, சாக்‌ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பஹீரா'. பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (அக்டோபர் 8) நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது:

"எனது 2-வது படத்துக்குப் பிறகு, என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்ட மாதிரி தான் இருந்தது. மீண்டும் வரும் போது ஒரு புதுமையான படத்துடன் தான் வர வேண்டும் என நினைத்தேன். 'பஹீரா' படத்தில் நடித்த யாருமே பெண்கள் யாரையுமே நாயகி என்பதற்குள் அடைக்க முடியாது. அனைவருமே பிரமாதமாக நடித்துள்ளார்கள். பிரபுதேவா - அமைரா இருவருக்கும் இடையே காட்சிகள் அருமையாக வந்துள்ளது. அதில் அமைரா அற்புதமாக நடித்துள்ளார்.

'பஹீரா' படம் இந்தளவுக்கு வந்ததிற்குக் காரணம் பிரபு மாஸ்டர் மட்டுமே. என்னை முழுமையாக நம்பினார். பெண் கெட்டப் போட வேண்டும் என்றவுடன், ஒகேவா... நன்றாக இருக்குமா என்று கேட்டார். நன்றாக இருக்கும் என்றவுடன் அப்போ ஒகே என்று சொல்லிவிட்டார். அவர் நினைத்திருந்தால் அதெல்லாம் முடியாது, நான் சொல்வதை மட்டும் செய் என்று சொல்லியிருக்கலாம். அவர் சொல்லியிருந்தால் நான் செய்து தான் ஆகவேண்டும்.

இது என்ன ஜானர் என்று அனைவரும் கேட்டார்கள். சத்தியமாக இது என்ன ஜானர் படமென்று எனக்கும் தெரியாது. எழுதும் போது ஒரு ஜானர், எடுக்கும் போது ஒரு ஜானர், இப்போது ஒரு ஜானராக வந்துள்ளது"

இவ்வாறு ஆதிக் ரவிச்சந்திரன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE