நிறைய மன அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் அதர்வா.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், அமிதாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தள்ளிப் போகாதே'. தெலுங்கு நானி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'நின்னு கோரி' படத்தின் தமிழ் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்று அக்டோபர் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதனை முன்னிட்டு படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்த நிகழ்ச்சியில் அதர்வா பேசியதாவது:
"ஒன்றரை ஆண்டுகள் காலண்டரிலிருந்து கிழித்துப் போட்டுவிட வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் அப்படித்தான் சென்றது. இதில் நிறையக் கஷ்டங்கள், இழப்புகளை அனைவரும் பார்த்துள்ளோம். நானும், கண்ணன் சாரும் அடுத்ததாக ஒரு காதல் கதை பண்ணலாம் என்று தான் திட்டமிட்டோம். அப்போது நிறையப் பேசினோம். 'நின்னு கோரி' ரீமேக் பண்ணலாம் என்று முடிவானது. ஒரே நாள் இரவில் ஒரு படக்குழுவை உருவாக்கினார். இந்தப் படத்துக்கு நல்ல தொழில்நுட்பக் குழுவினர் அமைந்தனர். இந்தப் படத்தின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிட்டோம். அவரிடம் பேசியவுடனே ஒப்புக் கொண்டார். அவருக்கு மொழி ஒரு தடையே இல்லை. இப்படி அனைத்து விஷயங்களுமே இந்தப் படத்துக்குத் தானாக அமைந்தது. படப்பிடிப்புக்கு முன்பே ஒரு குழுவாக அமைந்ததே இந்தப் படத்துக்கு முதல் வெற்றியாகப் பார்க்கிறேன்.
ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க மாட்டார் கண்ணன் சார். முதற்கட்ட படப்பிடிப்பை 20 நாட்களில் முடித்தோம். அதில் முக்கிய காட்சிகளை எடுத்துவிட்டு, பின்பு சில காட்சிகளுக்காகத் தாடி வளர்க்க வேண்டும் என்று பேசினோம். அதற்காக 3 வாரங்கள் போதும் என்றேன். அந்த நேரத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பையே முடித்துவிட்டார். பின்பு வெளிநாட்டிற்கு விசாவுக்கு அப்ளை செய்தோம். அந்த நேரத்தில் மற்றொரு படத்தை அறிவித்தார். இப்படி ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் ஓடிக்கொண்டே இருப்பார். அனைவருமே ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில் 3 படத்தைத் தயார் செய்து வைத்துவிட்டார். இதே மாதிரி இன்னும் நிறைய படங்கள் கண்ணன் சார் பண்ண வேண்டும்.
நம்மைச் சுற்றி நிறைய மன அழுத்தம், எதிர்மறை எண்ணங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தச் சமயத்தில் ஒரு நல்ல படம் பார்க்கலாம் என்று நினைத்தால் கண்டிப்பாக 'தள்ளிப் போகாதே' பாருங்கள். இந்தப் படம் திரையரங்கில் வெளியாவதில் மகிழ்ச்சி"
இவ்வாறு அதர்வா பேசினார்.