பல்வேறு ஓடிடி தளங்களுக்கு மத்தியில், கலைஞர் தொலைக்காட்சியும் ஓடிடி தளமொன்றைத் தொடங்கவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காலகட்டத்தில் மக்களிடையே ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன. தற்போது ஓடிடி தளங்களுக்குள்ளேயே படங்களின் உரிமைகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன.
தற்போது முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கென்று பிரத்யேக ஓடிடி தளங்கள் வைத்துள்ளன. தங்களுடைய நிகழ்ச்சிகள், தொடர்கள், படங்கள் என அனைத்தையும் ஓடிடியில் வெளியிட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது கலைஞர் டிவியும் ஓடிடியில் களம் காணவுள்ளது. தங்களுடைய நிகழ்ச்சிகள், தொடர்கள் ஆகியவற்றை வெளியிட ஓடிடி தளம் ஒன்றை வடிவமைத்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வருவதால், பல்வேறு புதிய படங்களின் உரிமைகளையும் கைப்பற்றி வருகிறது.
சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சார்பட்டா பரம்பரை', விரைவில் வெளியாகவுள்ள 'அரண்மனை 3' ஆகிய படங்களின் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.