தன் திறமையைத் திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்: கமல் உருக்கம்

By செய்திப்பிரிவு

தன் திறமையைத் திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன் என்று கமல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கமலின் திரையுலக வாழ்க்கைக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் சந்திரஹாசன். கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பணிகளை முழுமையாகக் கவனித்து வந்தார். இவர் கமலின் இரண்டாவது அண்ணன் ஆவார்.

2017-ம் ஆண்டு லண்டனில் உடல்நலக் குறைவால் சந்திரஹாசன் காலமானார். அவருடைய மறைவுக்குப் பிறகு, தற்போது கமல்ஹாசனே தயாரிப்புப் பணிகளைக் கவனித்து வருகிறார். தனக்கு அண்ணன் சந்திரஹாசன் எவ்வளவு பெரிய பலம் என்று பல்வேறு மேடைகளில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சந்திரஹாசன் நடித்துள்ள படம் 'அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க'. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 8-ம் தேதி இந்தப் படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

தனது அண்ணன் சந்திரஹாசன் மறைவுக்குப் பிறகு ட்ரெய்லர் வெளியாவது குறித்து கமல் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன் திறமையைத் திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசிப் படம் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ அக்டோபர் 8-ம் தேதி சோனு லைவ்வில் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்கக் கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8-ம் தேதி ரிலீஸ்’".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE