பெண்களின் மிகப்பெரிய வலிமை அமைதி: ஜோதிகா

By செய்திப்பிரிவு

பெண்களின் மிகப்பெரிய வலிமை அமைதியாக இருப்பது என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உடன்பிறப்பே'. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள 50-வது படமாகும். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. நேற்று (அக்டோபர் 4) இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இணையம் வழியே நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியதாவது:

"எனது குருநாதர்கள் பிரியதர்ஷன் சார் மற்றும் வஸந்த் சார் இருவருக்கும் நன்றி. எனக்குத் தெரிந்த அனைத்துமே இருவரிடமும் கற்றுக் கொண்டதுதான். கணவர் சூர்யாவுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை. எனது திரைப் பயணம் ரொம்ப எளிமையானது. பெரிய நாயகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஆனால், எனது இரண்டாவது இன்னிங்ஸில்தான் நிறைய கற்றுக்கொண்டேன். எனது திரைப் பயணத்தில் இதுதான் முக்கியமானது. கடந்த 8 ஆண்டுகள் மிகவும் அழகானது. ரொம்ப அர்த்தமுள்ள படங்களில் நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையில் நிறைய ரோல்களில் இருக்கிறேன். பெண்கள், குடும்பத்தினர் அனைவருமே பெருமைப்படும்படியான படங்களில் இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் அனைத்துப் படங்களையுமே ஒப்புக் கொள்கிறேன். இதுதான் நான் கடந்த 8 ஆண்டுகளில் கற்றுக்கொண்டது.

எனது 50-வது படம் 'உடன்பிறப்பே'. இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். இதுவரை நடித்த படங்கள் அனைத்திலுமே நிறைய பேசியிருப்பேன். ஆனால், பெண்களின் உண்மையான வலிமையை இந்தப் படத்தில்தான் பிரதிபலித்துள்ளேன். அதுதான் அமைதி. 90% பெண்கள் அப்படியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அமைதி மற்றும் வலிமையுடன் இருக்கிறார்கள். பேசுவது மிகவும் எளிது. அமைதியில் ஒரு வலிமை இருக்கிறது. இதுவரை நடித்த படங்களிலேயே ரொம்ப அழகான கதாபாத்திரம் இது. இரா.சரவணன் சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். எனக்கு இவ்வளவு வலிமையான கதாபாத்திரத்தில் நடித்தது ரொம்பப் புதுமையாக இருந்தது".

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE