நடிகை கங்கணா ரணாவத், இன்று காலை விமானப்படை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
2006-ல் 'கேங்ஸ்டர்' திரைப்படம் வாயிலாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர் கங்கணா ரணாவத். 2019-ல் வெளியபான 'மணிகர்ணிகா' என்ற வரலாற்றுப் படத்தில் ஜான்சி ராணியாக நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் கங்கணாவின் நடிப்பைப் பலரும் வரவேற்றனர்.
தற்போது மும்பையில் சர்வேஷ் மேவரா எழுதி இயக்கியுள்ள 'தேஜஸ்' என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார் கங்கணா. இந்திய விமானப்படை 2016ஆம் ஆண்டு முதல் நாட்டின் பாதுகாப்புப் படைகளில் பெண்களை முதன்முதலில் போர்ப்படைகளில் துப்பாக்கி ஏந்திச் செல்லும் வீராங்கனைகளாகக் களம் இறக்கியது. இந்த முக்கிய நிகழ்வில் உத்வேகம் பெற்று இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதில் கங்கணா, இந்திய விமானப்படை பைலட்டாக 'தேஜஸ் கில்' என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே விமானப்படைத் தளத்தில் அதிகாரிகளை இன்று அவர் சந்தித்தார்.
தனது இன்ஸ்டாகிராமில் இந்தச் சந்திப்பு குறித்த படங்களை வெளியிட்டுள்ள கங்கணா ரணாவத், அத்துடன் சில வாசகங்களையும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கங்கனா ரணாவத் வெளியிட்ட பதிவு:
"எங்கள் 'தேஜஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் அதே விமான நிலையத்தில் படப்பிடிப்புக்கிடையே உண்மையான விமானப்படை அதிகாரிகள்/ வீரர்களைச் சென்று சந்தித்தேன். சந்தித்த பிறகு எனக்குள் இருந்த ஹீரோகிரி மொத்த ஃபங்கிரியாக (அவர்களது ரசிகையாக) மாறிப்போனேன்.
வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தைப் பற்றி அவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்தனர். அதைப் பார்க்க ஆர்வமாக இருப்பதையும் என்னிடத்தில் தெரிவித்தனர். இந்தச் சுருக்கமான சந்திப்பு மிகவும் இனிமையானது. எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. ஜெய்ஹிந்த்’’.
இவ்வாறு கங்கணா குறிப்பிட்டுள்ளார்.