'டாக்டர்' படத்தில் நடித்தது கடினமாக இருந்தது: சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

'டாக்டர்' படத்தில் நடித்தது கடினமாக இருந்தது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாக்டர்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு 'டாக்டர்' படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

"எனக்குப் பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் 'ஓ பேபி' பாடல் கொஞ்சம் கஷ்டமாகப் பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்குப் பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப்படத்தில் எனக்கு வசனங்களே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். குறைந்த வசனங்கள் தான் என்பதால், இந்தப் படத்தில் நடித்தது கடினமாக இருந்தது. எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருக்க வேண்டும். ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார் என்று தோன்றியது. வினய் 'உன்னாலே உன்னாலே' படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். மனுஷன் மிகப்பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும். ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ இப்படத்தில் செய்தது காலத்திற்கும் பேசப்படும். அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்குப் புரியும். அனிருத் இந்தப்படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தவரே அவர்தான்.

இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் நன்றி. "

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE