ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் வதந்தி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்னும் பல்வேறு வெளிநாடுகளிலும் இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களிலும் முழுமையாகத் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியானால் வியாபாரத்தில் பாதிப்பு உண்டாகும் என்று தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, 'அண்ணாத்த' படத்தினை 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியானது. அந்தச் சமயத்துக்கு முழுமையாக கரோனா குறைந்து, தமிழகத்தில் திரையரங்குகளில் 100% மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இந்தச் செய்திகளினால் 'அண்ணாத்த' படத்தின் வெளியீட்டில் குழப்பம் ஏற்பட்டது.
தற்போது 'அண்ணாத்த' படம் தொடர்பான அத்தனை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடலை அக்டோபர் 4-ம் தேதி வெளியிடவுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதற்கான பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தப் போஸ்டரில் உள்ள தகவலின்படி தீபாவளிக்கு வெளியாகவுள்ளது 'அண்ணாத்த' திரைப்படம். அதன் வெளியீட்டில் எந்தவித மாற்றத்தையும் படக்குழு எடுக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.