ஓடிடியில் வெளியாகிறது 'காத்துவாக்குல ரெண்டு காதல்'?

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு முடிவு செய்தது. ஆனால், தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்துகொண்டே வருகின்றன. இதனால் சரியான வெளியீட்டுத் தேதி 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்துக்கு அமையவில்லை.

இதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டைத் தேர்வு செய்துள்ளது படக்குழு. ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் இந்தப் படத்தின் நேரடி டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைப் பெரும் தொகை கொடுத்துக் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி வெளியீடாக நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE