பிரபுதேவா நாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
'பொன் மாணிக்கவேல்', 'யங் மங் சங்', 'பஹீரா' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. தற்போது இயக்கத்திலிருந்து விலகி, நடிப்பில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் பிரபுதேவாவின் புதிய படமொன்று தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க ஆக்ஷன் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். ஜான் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.
இதில் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், ஷாருக் ஹாஸன், தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் பிரபுதேவா உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்னேஷ், இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், கலை இயக்குநராக மாய பாண்டி, எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சாம் ரோட்ரிக்ஸ், "பிரபுதேவா நடிப்பில் மாஸான முழு நீள ஆக்ஷன் படமாகத் தயாராகிறது. இந்தப் படத்தின் உச்சகட்டக் காட்சி, ரசிகர்களின் கண்களுக்குப் புதுமையானதாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.