மீண்டும் இணையும் 'அருவி' கூட்டணி

By செய்திப்பிரிவு

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ள புதிய படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கவுள்ளார்.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லட்சுமி கோபால்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அருவி'. இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது இதனை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'அருவி' படத்துக்குப் பிறகு, முற்றிலும் புதுமுகங்கள் நடித்த 'வாழ்' படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கினார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு புதிய கதையொன்றை எழுதி வந்தார் அருண் பிரபு புருஷோத்தமன்.

இந்தக் கதையை 'அருவி' படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது. முந்தைய படங்கள் போல் அல்லாமல் கமர்ஷியல் கதையாகப் பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE