நடிகர் விஜய்யின் போஸ்டர்களில் தலைவர்களின் படங்கள், அவசியாற்ற வார்த்தைகள் இடம்பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீப காலமாக, இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் ஆர்வ மிகுதியால் அல்லது ஆர்வக்கோளாறால் விஜய்யை பிற தலைவர்களோடு இணைத்தும், அவர்களது படங்களை விஜய் படத்துடன் இணைத்தும், அவசியமற்ற வார்த்தை பிரயோகத்தையும் உள்ளடக்கி போஸ்டர் வெளியிட்டு வருவது வழக்கமாகி வருகிறது.
ரசிகர்கள், இயக்கத்தினர் சிலரின் இச்செயல்களை அவ்வப்போது விஜய் அனுமதியோடு கண்டித்துள்ளேன்.
இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இருப்பினும், இயக்கத்தினர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது வருத்தத்துக்கு உரியது. இதனை விஜய்யும் விரும்புவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, இப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் தொடரும் பட்சத்தில், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.