திரையரங்குகள் திறப்பு: 'சூர்யவன்ஷி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளதால், 'சூர்யவன்ஷி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து 'சூர்யவன்ஷி' படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. முக்கியமாக இதில் 'சிங்கம்' அஜய் தேவ்கன் மற்றும் 'சிம்பா' ரன்வீர் சிங் என மற்ற இரண்டு போலீஸ் கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் படம் வெளியாகவில்லை. இந்தப் படம் பெரும் பொருட்செலவில் உருவானதால், ஓடிடி தளத்திலும் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. முழுமையாகத் திரையரங்குகள் திறப்பதற்குப் படக்குழு காத்திருந்தது.

முன்னணித் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இன்று (செப்டம்பர் 25) மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து திரையரங்குகள் திறப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 22-ம் தேதி மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 'சூர்யவன்ஷி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் வியாபார வர்த்தகம் ஏற்றம் காணும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE