காஞ்சிபுரத்தில் கிடைத்த அனுபவமே 'சிவகுமாரின் சபதம்': ஹிப் ஹாப் ஆதி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் கிடைத்த அனுபவமே 'சிவகுமாரின் சபதம்' படத்தின் கதை என்று ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவகுமாரின் சபதம்'. இதில் ஹிப் ஹாப் ஆதி, பிராங்க்ஸ்டர் ராகுல், விஜய் கார்த்திக், மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது:

"நிறையப் பேருக்கு இது முதல் மேடை, அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசியது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். அவர்கள் எதிர்பார்ப்புடன் இருப்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சத்யஜோதி மிகப்பிரமாண்டமாக 'அன்பறிவு' படத்தை எடுத்தார்கள். பொது முடக்கத்தால் அது கொஞ்சம் தள்ளிப்போனது.

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் போயிருந்தேன், அங்குக் கிடைத்த அனுபவத்தால் தான் இந்தக்கதையை எழுதினேன். இந்தப்படம் நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. என் தயாரிப்பாளர் ரிஸ்க் வேண்டாம் என்றார். ஆனால் என் நடிகர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். இந்தப்படத்திற்குப் புதுமுகங்கள் தான் சரியாக இருப்பார்கள் என்று தோன்றியது.

இந்தப்படம் வெற்றியடையும்போது இந்த நடிகர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வார்கள். சத்யஜோதி தியாகராஜன் அவர்களுக்கு இந்தப் படத்தைத் தயாரித்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் இண்டி ரிபெல்ஸ் உடன் இணைந்து தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். துணிந்தே ரிஸ்க் எடுத்து எடுத்துள்ளோம்.

தமிழ் தெரிந்த ஹீரோயின், அவர் பாண்டிச்சேரி தமிழ்ப்பெண் ஒரு மாதம் எங்களுடன் இணைந்து ரிகர்சல் செய்தார். திரையில் இப்போது அதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இந்தப்படம் தியேட்டரில் அமர்ந்து பார்க்க வேண்டிய படம். நான் கேட்டுக்கொண்டதை மதித்து, திரையரங்கில் படத்தைக் கொண்டுவந்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுப்பூர்வமான பயணம் தான் இப்படம். எல்லோருக்கும் பிடிக்கும், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும்"

இவ்வாறு ஹிப் ஹாப் ஆதி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE