முடிவடையாத 'லிஃப்ட்' வெளியீட்டுப் பிரச்சினை

By செய்திப்பிரிவு

'லிஃப்ட்' படம் வெளியீடு தொடர்பான பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

வினித் வரபிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லிஃப்ட்'. ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியது.

ஆனால், படத்தின் வெளியீட்டில் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு 'லிஃப்ட்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை வைத்துப் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டதாகக் கருதப்பட்டது.

இதனிடையே, 'லிஃப்ட்' பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை எனத் தெரிகிறது. தற்போது 'லிஃப்ட்' படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய லிப்ரா நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" ‘லிஃப்ட்’ படத்திற்காக நான் வாங்கிய பணத்திற்கான அசலைக் கொடுத்தும் அதை வாங்கத் தயாரிப்பு நிறுவனமான ஈகா என்டெர்டெயின்மென்ட் மறுத்துவிட்டது. அதனால், நான் வாங்கிய தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால் ‘லிஃப்ட்’ படத்தின் திரையரங்கு உரிமைகளை எனது முதலீட்டாளர்களுக்கு அளிக்கிறேன்."

இவ்வாறு லிப்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE