மூத்த ரசிகையிடம் வீடியோ காலில் பேசிய மோகன்லால்

நடிகர் மோகன்லால் வயதில் மூத்த தனது ரசிகை ஒருவரிடம் வீடியோ காலில் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

கேரளாவின் புன்குன்னம் என்கிற பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இருப்பவர் ருக்மிணி அம்மா. இவர் தீவிர மோகன்லால் ரசிகை. சில நாட்களுக்கு முன்பு, மோகன்லால் பெயரை வைத்துத் தன்னைப் பலரும் கிண்டல் செய்வதாகவும், அவரைச் சந்திக்க முடியவில்லை என்பது குறித்தும் இவர் பேசி அழும் காணொலி பலரால் பகிரப்பட்டது.

இதுகுறித்துக் கேள்விப்பட்ட நடிகர் மோகன்லால் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மோகன்லாலிடமே இதுகுறித்து எடுத்துச் சென்றனர். பிறகு, அவரே தனிப்பட்ட முறையில் ருக்மிணி அம்மாவை வீடியோ காலில் அழைத்துப் பேசியுள்ளார்.

ருக்மிணி அம்மாவை நலம் விசாரித்த மோகன்லால், அவரது வயது என்ன, ஏன் வீடியோவில் அழுதீர்கள் எனக் கேட்டார். ருக்மிணி அம்மா மோகன்லாலைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். கோவிட் பிரச்சினை முடிந்த பிறகு, தான் கண்டிப்பாக நேரில் வந்து சந்திப்பேன் என்று மோகன்லால் உறுதி அளித்துள்ளார்.

மோகன்லால், ருக்மிணி அம்மாவுடன் பேசும் இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE