'96' படம் இந்தியில் ரீமேக் ஆவது குறித்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது '96' படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார் அஜய் கபூர். இதில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதெல்லாம் இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. ஆனால், இந்தி ரீமேக்கின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
'96' படம் இந்தியில் ரீமேக் ஆவது குறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வதில் எனக்கு அதீத சந்தோஷம் கிடைக்கும். அந்தக் கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது என் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது. '96' படம் எனக்கு அலாதியான அனுபவமாக இருந்தது. இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர் அந்தப் பயணத்தை இந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன்".
இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.