மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், பிக்பாஸ் கன்னடப் பதிப்பின் வெற்றியாளர் பிரதமைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று வந்த செய்திகளுக்குப் பிரதம் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் பிரபலமான நட்சத்திரத் தம்பதிகளில் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் அவர் மனைவி நடிகை மேக்னா ராஜு அடக்கம். இருவரும் பத்து ஆண்டுகள் காதலித்து, குடும்பத்தினரின் சம்மதத்துடன் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக அகால மரணமடைந்தார். இது கன்னடத் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகம் மொத்தத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிரஞ்சீவி காலமான போது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். சிரஞ்சீவி மறைந்த ஐந்து மாதம் கழித்து மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சில வாரங்களுக்கு முன் தன் குழந்தையின் பெயர் என்ன என்பதைப் பற்றி மேக்னா ராஜ் பொதுவில் பகிர்ந்தார்.
இந்த நிலையில், சர்ஜா குடும்பத்தினருக்கு நெருக்கமான பிரதமை, மேக்னா ராஜ் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை வைத்து சில யூடியூப் சேனல்களும் தகவல் பரப்ப ஆரம்பித்தன. தற்போது இதற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதம் பதிலளித்துள்ளார்.
» பைக்கில் உலகம் சுற்ற அஜித் திட்டம்
» சிலம்பரசனின் கடின உழைப்பு: 'வெந்து தணிந்தது காடு' படக்குழு புகழாரம்
"முதலில் இந்தச் செய்தியை நான் புறக்கணித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் தற்போது 2.7 லட்சத்துக்கும் அதிகமானப் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. இப்படிப் பார்வைகள் பெறவும், பணம் சம்பாதிக்கவும் சேனல்கள் இவ்வளவுத் தரம் தாழ்ந்து போகும் போது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதே ஒரே வழி. இது போன்ற வீடியோக்கள் சட்டரீதியாக நீக்கப்படும்போது தான் அது மற்ற சேனல்களுக்கும் படிப்பினையாக இருக்கும்" என்று பிரதம் ட்வீட் செய்துள்ளார்.